Thursday, December 22, 2011

பெண்ணும் பரதமும்: பெண்விடுதலையும் பரதநாட்டியமும் - கவிதா


பெண்விடுதலை என்பது ஆழமான விடயம். பெண்ணியவாதிகள் பலர் பெண்ணியம் என்ற பெயரில் ஆண் எதிர்ப்புப் போராட்டம் நடாத்துகின்றனர். பெண்ணியம் என்பது ஆணாதிக்கத்தை தடுப்பதே தவிர ஆண் இனத்தையே எதிர்ப்பது இல்லை. ஆணாதிக்கம் என்பது எமது சமூகத்தில் ஆழவேரூன்றி விட்ட ஒரு விடயம். அதை வேரோடு பிடுங்குவதென்பது உடனே நடைமுறைப்படுத்தக்கூடிய காரியம் அல்ல. நிறையக் காலங்கள் தேவை.

இதில் ஆண்களை விட பெண்கள்தான் பெண்களுக்கு பல விசயங்களில் எதிரி. பெண்ணுரிமை என்ற பேரில் சிகரெட் குடிப்பது, குடிவகை பாவிப்பது, பல ஆண்களுடன் சுற்றுவது என்பதைக் கூட சிலர் பெண் உரிமை, சமஉரிமை என்ற பெயரில் செயலாற்றி வருகின்றனர். இப்படிப்பட்ட வளர்ச்சி எமது சமூகத்தை எந்த நிலைக்குக் கொண்டு வரும் என்பதை ஊகித்தே தெரிந்து கொள்ளலாம். எமது கலை கலாச்சாரம் என்பதை நாங்கள் ஊன்றிப் பார்த்தோம் என்றால் அனைத்திலும் ஆண் ஆதிக்கம் இருக்கத்தான் செய்கிறது.

பரதநாட்டியம் என்ற கலையையே எடுத்துக் கொள்ளுங்களேன் அதில் நாங்கள் கற்றுக் கொடுக்கும் விடயங்கள் என்ன? பழைய புராணக் கதைகளை நாட்டிய நாடகமாகப் போடுகின்றோம். அதில் சொல்லப்படுகிற விசயங்கள் எப்படிப்பட்டவையாக இருக்கிறது? புராணக் கதைகள் அனைத்துமே ஆண்களால் எழுதப்பட்டவை. ஆண்களுக்குச் சாதகமாகவே, அவர்கள் விரும்புகிற விதத்திலேதான் அனைத்துப் பெண் பாத்திரங்களும் சித்தரிக்கப்பட்டு இருக்கின்றன. அதில் புதிய மாற்றங்கள், எம்முடைய புதிய சிந்தனைகள் என்பதை நாம் வெளிக் கொணர முடியும். குறைந்த பட்சம் எமது கருத்துக்களையாவது கொண்டுவர வேண்டும்.

ஆனால் சமூகத்திற்குப் பயந்து அவைகளில் நாம் கை வைப்பதில்லை. அதற்கு இன்னுமொரு காரணம் பல இதிகாசங்கள் அனைத்தும் மதத்துடன் தொடர்புடையவையாகவே இருப்பது. சீதையை தீயில் இறக்கிய இராமாயணம், நளாயினி தன் கணவனை கூடையில் சுமந்து தாசியிடம் சென்றது, மகாபாரதத்தில் பெண்ணை வைத்து சூதாடியது இவைகள் சமூகத்திற்குக் கூறுவதென்ன?

எனக்குத் தெரிந்த கலையை வைத்தே நான் சில விடங்களைக் குறிப்பிட விரும்புகிறேன். பரதநாட்டியம் தாசிகளால் கோயில்களிலும் அரச சபைகளிலும்; ஆடப்பட்டு வந்தது அனைவரும் அறிந்ததே. அதனால்தான் பரதநாட்டியத்தில் இருக்கும் அனேக உருப்படிகள் காதல் ரசத்தை மையமாக வைத்து எழுதப்பட்டு இருக்கின்றன என்பது மறுக்க முடியாத உண்மை.

அவைகளைத் தான் நாம் இன்னமும் மீண்டும் ஆடவேண்டிய தேவை என்ன? புதிய சாகித்தியங்கள் இயற்றப்பட முடியாதா? இன்றை சமூகத்திற்கு தேவையான கருத்துக்களை நாம் நாட்டியம் மூலம் வெளிப்படுத்துதல் தவறாகுமா? ஆனால் நாம் ஒதுக்கப்பட்டு விடுவோமோ என்ற பயத்தில் அவைகளில் ஆர்வம் காட்டுவதில்லை. மீண்டும் மீண்டும் பழையனவே பழக்கி மரபு, தொண்மை பாதுகாத்தல் என்பதை தவறாகப் புரிந்து கொண்டு செயற்படுகிறோம் என்பதே உண்மை. மாற்றங்களை நாம் ஏற்றுக்கொள்ளும் மனப்பக்குவத்தை வளர்த்துக் கொள்வது மிகமிக அவசியம். ஆனால் அந்த மாற்றங்கள் நல்ல மாற்றங்களாக அமைய வேண்டும்.

எமது திருமணச் சடங்குகளையே எடுத்துப் பார்ப்போம். பெண்களுக்கு தாலி, மெட்டி, குங்குமம் (சிவப்புப் பொட்டு) என்று பல அடையாளங்களைக் கொடுத்து அபகரித்துக் கொள்ளும் சமூகம் திருமணம் முடிந்த ஆண்களுக்கு என்று அடையாளத்தை கொடுக்கின்றது? பூப்புனித நீராட்டு விழாக்கள் அக்காலத்தில் தேவையான ஒன்றாகி இருந்திருக்கலாம், இக்காலத்திலும் தேவையான ஒன்றா? இவைகளை யார் அதிகமாகக் கட்டி காத்து வருகின்றனர்? ஆண்களா? பெண்களா? தமிழ்ப் பெண்கள் சின்ன வயதில் நிறைய விடங்களைக் கற்றுக்கொள்கின்றனர். அந்த விடயங்கள் திருமணமான பிறகு தொடர்வதில்லை. சிலர் நோர்வேயில்; தாமாக கௌரவம், நேரமின்மை, குடும்பம் என்று பல காரணங்களை முன் வைத்து விட்டுவடுவது உண்டு.

தம்மை முற்போக்கு வாதிகளாக வெளியுலகிற்குக் காட்டிக்கொள்ளும் பல ஆண்கள் தமக்கு என்று வரும் பொழுது சிறுக சிறுக குத்திக்காட்டியே பெண்களைச் செயலிலக்கச் செய்பவர்களும் உண்டு.
ஆணாக இருந்தாலும் சரி, பெண்ணாக இருந்தாலும் சரி, ஒருவருடைய உணர்வை ஒருவர் புரிந்து கொள்ள முடியாவிட்டாலும், மதிக்கப் பழகிக் கொண்டால் இந்த எதிர்ப்பு வாதங்களிற்கு அவசியமற்றுப் போய்விடும். மதிப்பும், விட்டுக்கொடுப்பும், நேசமும்தான் பெண்ணியம். ஆணாதிக்கம் என்ற பேச்சுக்கே இடமில்லாமல் செய்யும் சக்தி வாய்ந்தவை. ஒருவர் மீது ஒருவர் உண்மையான நேசம் இருக்குமென்றால் விட்டுக்கொடுப்பும் மதிப்பும் தானாக வந்து விடும். நேசம் தான் இப்பெரும் வியாதிக்கு ஏற்ற மருந்து.

(கவிதா இரவிக்குமார் சிறுவயதிலேயே நோர்வேய்க்கு புலம்பெயர்ந்து வந்து ‘வளர் நிலா’ என்ற சிறுவர் இதழின் ஆசிரியராக இருந்தவர். இவர் ’பனிப்படலத் தாமரை’ என்ற கவிதைத் தொகுப்பை தமிழிலும், நோர்வேஜிய மொழியிலும் எழுதி வெளியிட்டு உள்ளார். ’நோர்வே முத்தமிழ் அறிவாலயம்;’ என்ற தமிழ் பாடசாலையில் ஆரம்ப நடனத்தைப் பயின்று, அதே பாடசாலையில் நடன ஆசிரியையாகக் கடமையாற்றுகின்றார். இவர் நவஜோதி யோகரட்ணத்திற்கு வழங்கிய நேர்காணலின் ஒரு பகுதியே இது. முழுமையான நேர்காணலை லண்டன் உதயன் பத்திரிகையில் பார்க்க.)

நன்றி: http://thesamnet.co.uk/?p=277

பெண்களை அடிமைப்படுத்தும் பழ(மை)மொழிகள் மணிமுத்து




ஒரு இனத்திற்குரிய அடையாளங்களுள் முதன்மையானதும் முக்கியமானதுமாகக் கருதப்படுவது மொழி. மொழி என்பது வெறுமனே தகவல் தொடர்பிற்கான கருவி மட்டுமல்ல. ஒரு இனத்தை, அவ்வினத்திற்கான பண்பாட்டுக் கூறுகளை, வாழ்வியலை, வரலாற்றை, அற, மற நெறிகளை அறிய வேண்டுமாயின் அவ்வினத்திற்குரிய மொழியை அறிய வேண்டும்.

மொழியின் கூறுகளைத் தீர்மானிக்கும் காரணி களாக ஆட்சி அதிகாரம் இருந்தாலும் ஒடுக்கப்பட் டோருக்கான மொழி, மிகுந்த வீரியத்தோடே வெளிப்படுகிறது. மிகக் குறுகிய காலத்தில், மிகக் குறைந்த அளவே வெளிப்பட்டி ருப்பினும் தலித் இலக்கிய எழுச்சியும், பெண் படைப்பாளர்களின் படைப்பும் ஏற்படுத்திய அதிர்வை யாராலும் மறுக்க இயலாது.

தாய் வழி சமூகத்திலிருந்து படிப்படியாக மாறிய சமூக அமைப்பில் பெண்களிடமிருந்து பறி போனவை களில் மொழியும் ஒன்று.

ஆண் மைய சமூகத்தில் பெண்ணின் மொழியும் வலியும் ஆவணங்களற்றுப் போய்விட்டது எனினும் ஆட்டுக்குத் தழை ஒடிக்கும் அருவாளை இடுப்பில் சொறுகும் இலாவகத்தோடு மொழியைக் கையாண்ட ஆத்தாள் களின் மொழி வாய்மொழி யாகவே இன்றளவும் நீடித்திருக்கிறது.

மொழியின்நுட்பமான வடிவங்களில் வீரியம் மிகுந்த நுணுக்கமானவடிவமே பழமொழி.

நாட்டுப்புற இலக்கிய வடிவங்களில் சாதி, மதம், வர்க்கம் என்ற எவ்விதப் பேதமுமற்று மிகச் சரளமாக வெளிப்படக் கூடிய வடிவமாகப் பழமொழி திகழ் கிறது. எனினும் மொழியின் எல்லா வடிவங்களிலும் இயங்கும் அரசியல் பழ மொழியில் மிக அதிகமாகவே புழங்குகிறது.

ஒரு குறிப்பிட்ட இனத்தின், குழுவின் உளவிய லைக் கட்டமைக்கும் கூறுகளில் பழமொழிகளுக்கு முக்கியப்பங்குண்டு என்பதை மறுக்கஇயலாது.

ஒருமுறை வட்டாட்சியர் அலுவலகம் சென்றிருந் தோம். அரசு அலுவலகங்கள் கணினி மயமாக்கப் படுவதற்கான ஆரம்பக்கட்டப் பணிகள் நடந்து கொண்டிருந்த காலகட்டமது. அலுவலகத்திலிருந்து வெளிப்பட்ட வயதான பெண்மணி ஒருவர் போகிற போக்கில் ஒருபழமொழியை வீசிவிட்டுச் சென்றார். "கீழொண்ணும் (மடி கணினி) மேலொண்ணும் (கணினி) வச்சுத் தட்டிட்டே இருக் கானுக வேலதா ஒண்ணும் ஆக மாட்டேங்குது'' அறுக்க மாட்டாதவன் கையில அம்பத்தெட்டு அருவாளாம்'' என்றுகூறிச் சென்றார்.

ஒரே ஒரு பழமொழியில் அரசு இயந்திரத்தின் மெத்தனப் போக்கின் மீதானஒட்டுமொத்த விமர்சனத் தையும் அவரால் வீசிச் செல்ல முடிந்தது.

தகவல் தொழில் நுட்பமும், நவீன மயமும் மனிதர்களின் மனப்பான்மை மாறினாலேயன்றி அதன் உயர்வான நோக்கத்தை அடையவே இயலாது என்ற தனது ஆத்திரத்தை ஒரு பழமொழியில் அவரால் பதிவு செய்ய முடிந்தது. ஒருசாதாரண பழமொழி கலகக் குரலாக ஒலித்தது.

பாமர மக்களின் மீது ஏவப்படும் அடக்கு முறைகள் யாவும், தனக்கு விதிக்கப்பட்ட வாழ்க்கை என்று மிக இயல்பாய் அம்மக்களே ஏற்றுக் கொள்ளும் உளவியலைக் கட்டமைப் பதில் பழமொழிகளின் பங்கு அசாத்தியமானது.

“முடவன் கொம்புத் தேனுக்கு ஆசைப்படலாமா?'' எனும் பழமொழி மிக இயல்பாக அவரவர்க்கான இருத்தலை வரையறைப்படுத்துகிறது. சாதியாலே õ, வர்க்கத்தாலோ, பாலினத்தாலோ, ஒருவருக்கென்று பிறப்பால் நிர்ணயிக்கப்பட்டிருக்கும் எல்லையை, வாழ்க்கை முறையை மாற்றியமைப்பது குறித்து யாரும் சிந்திக்கத் தேவையில்லை என்று உபதேசிக்கிறது. சிந்திக்கக் கூடாதுஎன்று கட்டளை யிடுகிறது. முடவன் கொம்புத் தேனுக்கு ஆசைப்படு வதை இயலாத காரியமாகச் சித்தரிக்கிறது. முடவர் கொம்புத் தேனைப் பெறுவதற்கான வழிமுறைகளை ஆராய்வதைத் தடை செய்கிறது

. இத்தகைய உளவியல் கட்டமைப்புக் களால்தான் நூறுகோடிக்கும் மேற்பட்ட மனித மூளைகள் சிந்திப்பதையே மறந்து தேசியங்களின் சிறைக் கூடத்தில் சீரழிகிறது. மனித மலத்தை மனிதனே தன்கையால் அள்ளுகின்ற, தன் தலையில் சுமக்கின்ற அவல நிலை இன்றளவும் தொடர்கின்றன தெனில், முடவன்கொம்புத் தேனுக்கு ஆசைப்படக் கூடாதென்ற உளவியல் கட்டமைப்புதான். இதுதன் விதி; இதைத் தாண்டி சிந்திக்கக் கூடாது என்பதுதான்.

“அரசன் அன்று கொல்வான்; தெய்வம் நின்று கொலலும்'' எனும் பழமொழி நீதியின்பால் மக்களுக்கு இருக்கும் எழுச்சியை மழுங்கடிக்கிறது. எவ்வளவு அநியாயம் நடப்பினும் அதை தெய்வம் நின்று கொல்லும் என்று ஆசுவாசப்பட வைக்கிறது.

பசுவைக் கொன்ற மகனைத்தேர்க் காலில் இட்டுக் கொன்றவனை மனு நீதிச் சோழன் என்று புகழ வைக்கிறது. மனித நீதியை மறுக்கிறது. தேர்க்காலில் ஒரு பசுவைத் தவிர ஒரு எருமையோ, நாயோ, பன்றியோ விழுந்திருந்தால் சரித்திரத்தில் இந்நிகழ்வு பதிவாகியிருக்குமா? மன்னன் இதேபோல் செயல் பட்டிருப்பானா என்று ஆராய்வதை, கேள்வி கேட்பதை மறுதலித்து அரசன் நினைத்தால் அன்றே கொல்ல முடியும் என்று நம்ப வைக்கிறது.

இதே ரீதியில்தான் பெண்களின் இயல்பு குறித்த பழமொழிகளும் பெண்களின் ஒழுக்கத்தை அடிமைத் தனத்தை திட்டமிட்டே கட்டமைப்பவைகளாகத் திகழ்கின்றன.

'அடுப்படியே திருப்பதி

வாசப்படியே வைகுந்தம்

ஆம்பளையே பெருமாள்'

மேலோட்டமாகப் பார்த்தால் இப்பழமொழிக்கு இன்று வேலையே இல்லை. வழக்கொழிந்ததாகத் தோன்றும். ஆனால் அது வெறும் தோற்றம்தான் உண்மையல்ல. இங்கே அடுப்படி என்பதோடு கூடுதலாக அலுவலகம் என்றொரு வார்த்தையும் சேர்ந்துவிட்டால் இன்றளவும் இப்பழமொழியில் பெரிய மாறுதல் வந்துவிடவில்லை என்பதை உணரலாம். பெண்ணின் கல்வி வருமானத்திற்கானது. பெண்ணின் வருமானம் குடும்பத்திற்கானது. வேறு எதையும் அவள் சிந்திக்கத் தேவையில்லை.

காவிரி, முல்லைப் பெரியாறு பிரச்சனை பற்றியோ, போபால் விஷ வாயு விபத்தில் இழைக்கப்பட்ட அநீதி பற்றியோ அவள் கவலை கொள்ளத் தேவையில்லை. வங்கிகள் தன்வாடிக்கையாளர்களுக்கு அக்கறையாய் வழங்கும் ஏடிஎம் அட்டைகளை அதை விடவும் அக்கறையாய் தன் தந்தையிடமோ, தனயனிடமோ கணவனிடமோ ஒப்படைத்துவிட்டு அடுப்படியும் அலுவலகமுமாய் இனிதே இருக்கலாம். (அம்மாவிடம் ஏடிஎம் கொடுத்தேன் என்று கூறிய எந்த மனித ஜீவ ராசியையும் நான் இதுவரை சந்திக்க நேராதது ஒருவேளை என் வாய்ப்புக் கேடாக இருக்கலாம்)

“அடுக்களைக்கு ஒருபொம்பளை

அம்பலத்துக்கு ஒரு ஆம்பளை...'

எனும் போக்கால்தான் வன்புணர்ந்தவனையே மணம் புரியச் சொல்லும் அதி அற்புதமானதீர்ப்புகள் நம்மவூர் நாட்டாமைகளால் நிலைநாட்டப்பட்ட கேலிக் கூத்துக்கள் அரங்கேறியிருக்கின்றன. இந்தத் தீர்ப்பை இன்றளவும் நிலைநாட்டுவதில் கட்டிக் காப்பதில் பழமொழிகளை விடவும் கோடம் பாக்கத்தின் கலையுலக பிரம்மாக்களுக்கே புண்ணியம் கோடி.

பரத்தையினால் தலைவன் பிரியலாம், பிரிந்து பரத்தையரோடு கூடிக் களித்துவிட்டு தலைவியின் நினைவு வரும்போது பாங்கனையோ, பாங்கியையோ இன்னும் யார் யாரையெல்லாமோ கொ.ப.செ.வாய் தன் யோக்கியதையை விளக்கிக் கூறி நிரூபிக்கத் தூதனுப்ப லாம் என்றெல்லாம் இலக்கணம் வகுத்த சமூகம், பெண்ணின் பாலுணர்வை அங்கீகரிக்கவுமில்லை. அனுமதிக்கவுமில்லை. பரத்தியரைத் தாழ்த்துவதற்குத் தவறியதுமில்லை.

"அரசனை நம்பி புருஷனைக் கைவிடாதே..' என்று அச்சுறுத்துகிறது. தன் நிலையிலிருந்து வேறொன்றுக்கு ஆசைப்பட்டு விடாதே. அப்படி ஆசைப்பட்டு விட்டால் உள்ளதையும் இழந்து விட வேண்டும் என்று பயமுறுத்துகிறது. ஒருவேளை ஒரு பெண் அவ்வாறு தேர்ந்தெடுத்து தன் நிலையினின்று தாழ்ந்து விட் டாலும், அது அவளின் தனிப்பட்ட வாழ்க்கை, தன் தேர்வு, அவள் தீர்மானிக்கட்டும் என அனுமதிக்க மறுக்கிறது.

“ஒண்ணுந் தெரியாத பாப்பா...

ஓரக் கண்ணால் போட்டாளே தாழ்ப்பா..'

என்று பெண்ணினுடைய பாலுணர்வைக் கொச்சைப்படுத்துகிறது. கரப்பான் பூச்சிக்கும் பாலியல் தெரியும். ஆனால் ஒரு பெண் தெரிந்து வைத்திருப்பது குற்றமா?

"பொண்டாட்டி செத்தா... புருசன் புது மாப்பிள்ளை'யாம். எவ்வளவு இயல்பாக ஆணின் மறுமணம் அங்கீரிக்கப்படுகிறது. ஆனால் இன்றளவும் இளம் விதவைகள் இல்லாத ஒரு ஊரையேனும் நாம் பார்த்துவிட முடியுமா? விமர்சனங்கள் எதுவுமற்று விதவை மறுமணத்தை நடத்தி விடத்தான் முடியுமா?

"தளுக்குப் போச்சு மினுக்குப் போச்சு

தலப் புள்ளையோட...

முகத்தில் இருந்த பவுசும் போச்சு

மூணாம் புள்ளையோட..'

இப்பழமொழியின் பொருள் இன்று ஓரளவு மாறியிருக்கலாம். பெண்கள் தங்களை அழகுபடுத்திக் கொள்கிறார்கள். ஆனால் அவ்வழகு ஆளுமையாக உயராமல், சுய சிந்தனையோடு வெளிப்படாமல் வெறும் காட்சிப் பொருளாகவும், நுகர்வுப் பொருளாக வுமே பெருமளவு நின்று விடுகிறது.

மேலும் இப்பழமொழி வெறும் அழகியலோடு மட்டுமே நின்று விடாமல் ஆரோக்கியத்தையும் பேசுகிறது. குழந்தை பிறந்த பிறகு தாய் தன்னைப் பற்றி அதிகம் கவனம் செலுத்துவதில்லை. செலுத்த தேவையுமில்லை என்பதையும் பேசிச் செல்கிறது. இதனால் அழகு சாதனப் பொருட்களின் விற்பனை உச்சத்தைத் தெ õடுகிற அதேநேரத்தில் கர்ப்பப் பை புற்று நோயினால் அறுவை சிகிச்சை செய்யும் பெண்களின் எண்ணிக்கை அதிகரிப்பது பற்றியும் எவ்வித விவாதமும் இங்கு எழவில்லை.

"மண்ணுக்குப் பூசிப் பாரு

பெண்ணுக்குப் பூட்டிப் பாரு'

எவ்வளவு அழகானபழமொழி. வரதட்சணை பற்றியெல்லாம் பேசுவது இப்பொழுது மதிப்பிழந்து விட்டது. அந்தளவிற்கு வாழ்வியலின் தவிர்க்க முடியாததொரு அங்கமாகி விட்டது வரதட்சணை. இதுகுறித்து எந்தவொரு எம்பிஏ., எம்சிஏ பட்டதாரிகளும் வாய் திறப்பதில்லை. என்னதான் படித்த பட்டதாரியாகப் பெண் இருந்தாலும் அவளுக்கு (நகை) பூட்டித்தான் அழகு பார்க்க வேண்டும் என்பதுதான் இங்கு நியதி.

"பெண்ணின் கோணல்

பொன்னில் நிமிருமாம்'

அழகு குறைந்த பெண்களைப் பெற்றவர்களுக்கு அறிவுரை வேறு? பொன்னைச் சேர்த்து வை என்று உபதேசிக்கிறது பழமொழி.

"மாமியாரு ஒடச்சா மண்சட்டி

மருமக ஒடச்சா பொன்சட்டி'

இந்த ரீதியான பழமொழிகள் பெண்ணையே பெண்ணுக்கு எதிரியாக்குபவை. உண்மையில் ஆண் களின் இந்த சூத்திரம்தான் பெண்களை இந்தளவிற்கு அடிமையாக்கி வைத்திருக்கிறது.

இத்தனைகேலிக் கூத்துக்களை தன்னுள்ளே வைத்திருக்கும் இச்சமூகத்தில் குழந்தைகள் மட்டும் தாயைப் போல்தான் வளர வேண்டுமாம்.

தாயைப் போல பிள்ளை

நூலைப் போல சேலையாம்...

மரபியல்படி தாயின் குணங்களை குழந்தை பெற்றி ருக்கும் என்று ஜீன் அறிவியல்படி இப்பழமொழியை ஆராய வேண்டிய அவசியமில்லை. ஏனெனில் அவ்வளவு அறிவார்ந்த பொருளில் இப்பழமொழி புழக்கத்தில் இல்லை.

தந்தை எவ்வளவு கேடு கெட்டவனாக இருந் தாலும், இச் சமூகம் எவ்வளவு கழிசடையாக புரையோடிப் போயிருப்பினும் தாய் ஒழுக்கமாயிருந் தால், குழந்தை ஒழுக்கமாயிருக்கும் என்று கருதுவது எவ்வளவு நகைப்புக்குரியது. உண்மையில் தாய் வழிச் சமூகமாயின் இப்பழ மொழியை ஆய்வுக் கெடுத்துக் கொள்ளலாம். ஆனால் பெண்ணை அடிமையாக வளர நடத்துகிற சமூகத்தில் குழந்தை ஒழுக்கமாக வளர வேண்டும் என்பது தாயின் மீது, பெண்ணின் மீது அனைத்துப் பொறுப்புகளையும் சுமத்தி ஒழுக்கம் என்பது பெண்ணுக்கு மட்டுமே உரியது என்று கட்டமைக்கிறது.

சமூகச் சீரழிவுகளால் ஒரு குழந்தை சீரழிந்தாலும் அது தாயையே குற்றம் சாட்டுகிறது. தாயை (பெண்ணை) குற்ற உணர்வுக்கு உள்ளாக்குகிறது.

உண்மையில் இப்பழமொழிகள் இக்காலத்தில் வழக்கிழந்து விட்டதாகவோ, பொருளற்றதாகவோ, எவரேனும் கருதினால் அதுகுறித்து கவலை கொள்ளத் தேவையில்லை. மொழியை ஆயுதமாக்க வேண்டிய தேவை அநீதிக் கெதிராகப் பாடுபடும் அனைவர்க்குமே உரியதுதான். சமூக மறுமலர்ச்சியின்பால் சமத்துவத் தின்பால் நம்பிக்கை கொண்டு போராடுகிற அனைவர்க்குமான ஆயுதமே இது.

நன்றி - கீற்று


Wednesday, December 7, 2011

பெண்ணியம் - ஒரு பார்வை


மீரா கிருஷ்ணன்குட்டி: படைப்புகளை தலித் என்றும் பெண்ணெழுத்து என்றும் பலவிதப்பட்ட லேபிள்களை ஒட்டி வெவ்வேறு அறைகளில் அடுக்கி வைக்கும் இன்றைய நிலையைப் பற்றி என்ன கூறுகிறீர்கள்?

ஜெயகாந்தன்: இது அவரவர்கள் தங்களுக்குத் தாங்களே ஒட்டிக்கொள்ளும் லேபிள் ஆயிற்றே -- அதனால் அவர்களுக்கு நன்மை இருக்கிறது என்று நினைத்துத்தானே அவர்கள், அதைச் செய்கிறார்கள். இல்லாவிட்டால் எழுத்தாளர்கள் அதைப் பிடித்து கிழித்து எறியட்டும். மாறுபட்ட முகவரியை விரும்புபவர்கள் அதைத் தொடரட்டும்.

மீரா கிருஷ்ணன்குட்டி: பெண்ணெழுத்து என்ற லேபிளை பெண்களே எடுத்து அணிந்து கொள்கிறார்கள் என்று கூறலாமா?

ஜெயகாந்தன்: தேவையில்லை என்பவர்கள் போராடி அதைக் கழற்றி எறியட்டும் தீர்மானிக்க வேண்டியவர்கள் பெண்களே.

மீரா கிருஷ்ணன்குட்டி: இப்படிப்பட்ட பிரிவினை வாசகர்களை சிந்தனைக் குழப்ப ங்களில் சிக்க வைத்துவிடாதா? நீங்கள் அதை ஆதரிக்கிறீர்களா?

ஜெயகாந்தன்: பிரிவினையால் உண்டாகும் சிந்தனைக் குழப்பம் படிப்படியாக மறைந்து விடும். தெளிவு மீண்டும் பிறக்கும். பிறகு... நான் ஒரு சட்டம் உண்டாக்குகிறவன் அல்லது--நல்லது, கெட்டது என்றெல்லாம் கூறக்கூடிய ஆள் இல்லை நான்.

தமிழில் - சுரா

சிவதாணு: தற்போதைய பெண் கவிஞர்கள் உடல்மொழியை மையப்படுத்தி எழுதும் எழுத்துக்களை தவறு என்று பேசுபவர்களைப் பற்றி...

பாமா:
இதுவரையில் மொழியென்றாலே ஆண் மொழிதான். மொழியின் மீது ஆதிக்கம் செலுத்தி வந்தவர்களுக்கு, பெண்கள் சுதந்திரமாக அவர்கள் மொழியில் எழுத ஆரம்பித்தபோது கூப்பாடு போடுகிறார்கள். அவர்களுக்குப் பாதுகாப்பு உணர்வு இல்லை என்பதையே இது காட்டுகிறது. காலம் காலமாகப் பெண்களை ஒடுக்கி வந்த கூட்டத்திற்கு, பெண்கள் மொழியாலும் ஒடுக்கப்பட வேண்டும் என்ற எண்ணத்தின் வெளிப்பாடுதான் இது.

சிவதாணு: பெண் கவிஞர்கள் தங்களின் உடல் மொழிகளில் எழுதுவதை ஆபாசம், வக்ரம் என்று சிலர் கடுமையாக எதிர்க்கிறார்கள். தாங்கள் இதை எப்படி எடுத்துக் கொள்கிறீர்கள்?

நாஞ்சில் நாடன்: ஒருவிதமான ஆபாசமும் இல்லை. வக்ரமும் இல்லை. மனதளவில் உணர்ச்சியளவில் அதை இலக்கியமாக வெளிப்படுத்துவதில் ஆணுக்கு உண்டான சகல சுதந்திரங்களும் பெண்ணுக்குமுண்டு. நமது மொழியில் இது மிகவும் தாமதமாக வெளிப்பட்டுள்ளது. இவர்கள் ஆபாசம் என்றும், வக்ரம் என்றும் எதைச் சொல்கிறார்கள் என்றே எனக்குத் தெரியவில்லை. பெண் உடல் ஆபாசம், பெண்மொழி ஆபாசம், பெண்ணின் வேட்கை வக்ரம், பெண்ணின் சுதந்திரதாகம் வக்ரம் என்று சொல்பவர்கள் பிற்போக்குவாதிகளும் மனநோயாளிகளுமாகவே இருப்பார்கள். அவ்வையாரும், ஆண்டாளும், சங்க இலக்கியப் பெண்பாற் புலவர்களும் அன்று எடுத்துக்கொண்ட சுதந்திரத்தில் அரைப்பங்கு கூட இன்றைய பெண் இலக்கியவாதிகள் எடுத்துக் கொள்ளவில்லை என்பதே உண்மை.

சிவதாணு : தற்போது எழுதிவரும் கவிஞர்களின் கவிதை பற்றிய உங்கள் பார்வை என்ன?

வல்லிக்கண்ணன்: எப்பவும் இரண்டு வகையாக எழுதுகிறார்கள். ஒன்று தனி மனித உணர்ச்சிகளை மையமாக வைத்து எழுதுகிறார்கள். இவர்கள் தங்களின் மனப்பதிவுகளை எழுதுவதால் சில சமயம் கவிதைகள் புரியாமல் போய்விடுகிறது. இன்னொரு வகை, சமூகப் பார்வையோடு, அரசியல் உணர்வோடு எழுதுகிறார்கள். இவர்களில் பலபேர் சொன்ன விஷயங்களையே திரும்பச் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். சிலர் சமூக அவலங்களையும் வாழ்க்கைக்குறைபாடுகளையும் சமூகத்தின் கவனத்திற்குக் கொண்டு வருகிறார்கள். இவர்களில் மாறுபட்ட ஒரு போக்காக பழமலை, தொன்மங்கள் பழைய மூதாதையர்கள் பற்றி கதைச்சுவையுடன் கவிதை எழுதி வழிகாட்டினார். சிலர் இவரைப் பின்பற்றுகிறார்கள். தலித்திய நோக்கில் அனேகர் எழுதுகிறார்கள். ஒடுக்கப்பட்ட, பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்டவர்களுடைய உணர்வுகளையும், வாழ்க்கைமுறைகளையும் கவிதையில் வெளிப்படுத்துகிறார்கள்.

பெண்ணியம் சார்ந்து பெண்கள் பலர் தீவிரமாகக் கவிதை புனைகிறார்கள். இவர்கள் பெண் உணர்வுகளையும், ஆணாதிக்கச் சமூகத்தில் பெண்களின் வாழ்க்கை நிலைகளைப் பற்றியும் எழுதுவதுடன், அவர்கள் உடல் ரீதியான உறவுகளையும் காம வெளிப்பாடுகளையும் ஒளிவு மறைவு இல்லாமல் எழுதுகிறார்கள். இது ஆண்களோடு போட்டியிடுவது போலவும், வாசகர்களுக்கு அதிர்ச்சி அளிப்பதாகவும், புரட்சிகரமான போக்கு என்று கருதி செயல்புரிவதாகவே எனக்குத் தோன்றுகிறது. அவர்களுக்கு அப்படி எழுத உரிமை இருக்கிறது. என்றாலும் அது பண்பாட்டுச் சிதைவையே காட்டுகிறது. இப்படி சில ஆண்களும் எழுதுகிறார்கள். பெண்கள் எழுதினாலும் ஆண்கள் எழுதினாலும் இது தவறான போக்கேயாகும்.

சமீப காலத்தில் ஹைகூ என்று மூன்று வரிகளில் எழுதுவது அதிகரித்திருக்கிறது. அதிலும் சென்றியூ, லீமர்க்கூ என்றெல்லாம் சொல்லிக்கொண்டு புதுமை பண்ணுகிறார்கள். இவை பெரும்பாலும் கவிதையாக இருப்பதில்லை. எந்த வடிவத்தில் சொல்லப்பட்டாலும் கவிதை, கவிதை அழகுடன் விளங்கவேண்டும்.

சிவதாணு: “சில பெண்களைப் பார்க்கும் போது கையெடுத்துக் கும்பிடத் தோன்றுகிறது. ஆபாசமாகக் கவிதை எழுதும் பெண்களை அண்ணா சாலையின் நடுவில் நிறுத்தி சுடத் தோன்றுகிறது.” இப்படி சொன்ன திரைப்பட பாடலாசிரியர் சினேகனின் கூற்று பற்றி?

பா. செயப்பிரகாசம்: மனித சமூகத்தில் சரிபாதியாக இருப்பவர்கள் பெண்கள். ஒரு பாதி இன்னொரு பாதியை அடிமைப்படுத்துவது என்பதை நாம் அனுமதிக்க முடியாது. இந்த அடிமைத்தனம் என்பது பெண் ஒரு எதிர் பாலியல் என்ற கருத்தின் அடிப்படையில்தான் நிலவி வருகிறது - செயல்படுத்தப்படுகிறது. அடிமைப்படுத்தப்பட்ட பகுதி தன்னை விடுதலை செய்து கொள்வதற்காக எல்லா துறைகலும் மேலெழுந்து போராடுகிறது. விடுதலை என்பது விரும்பி தரப்படுவது அல்ல, தானே எடுத்துக்கொள்வது. எனவே அடிமைப்படுத்தப்பட்ட எதிர்ப் பாலியல் முதலில், எதன் காரணமாய் அடிமைப்படுத்துதல் தோன்றியதோ அந்த பாலியல் விடுதலையைக் கோருகிறார்கள். பெண் என்றாலே பாலியல் உறுப்புகளின் அடையாளமாகவே பார்க்கப்படுகிறாள். எனவே பாலியல் விடுதலையை வேண்டுகிற பெண் வர்க்கம் பாலியல் உறுப்புகளைப் பேசாமலோ பாலியல் செயல்பாடுகளைக் குறிப்பிடாமலோ படைக்க முடியாது. அதை இவர்கள் ஆபாசம், வக்ரம் என்று விஞ்ஞானமற்ற சொற்களால் குறிப்பிடுகிறார்கள்.

இதற்குமுன் ஆண்கள் பெண் உறுப்புகளின் செயல்பாடுகளை தங்களுடைய இச்சைக்கு உகந்ததாக வர்ணித்து வந்தார்கள். உண்மையில் இவர்கள் எழுதியதுதான் அநாகரீகம். சினேகன் தன்னை மேலாகவும் பெண்ணைக் கீழிடத்திலும் வைத்துப் பார்க்கிறார். பொதுவாக ஆண் பார்வையின்படி பெண்களை இரண்டாகப் பிரிக்கிறார். ஒருவர் பூஜிக்கத் தக்கவர் -- இன்னொருவர் அண்ணாசாலையில் வைத்து சுட்டுக் கொல்லத் தக்கவர் என்று. இந்த இரண்டுமே பெண்ணை அடிமைகளாகப் பார்க்கும் பார்வைதான். இந்த சினேகன் போன்றோர் குரல் கொடுக்காததனாலேயே பெண்கள் தங்களுக்காகவே தாங்கள் எழுத எழுந்தார்கள். அவர்கள் எழுதிய எழுத்துக்களுக்கு அண்ணாசாலையில் வைத்து அவர்களுக்கு மரணதண்டனை என்றால் - சினேகன் போன்றோர்க்கு என்ன தண்டனை அளிப்பது?

சிவதாணு : இலக்கியத்தில் தலித் இலக்கியம் என்று ஒன்று தேவையா என்று சிலர் கேட்கிறார்கள். இதைப் பற்றி உங்களுடைய கருத்து என்ன?

ரமேஷ் – பிரேம் : இலக்கியம் என்பதில் முழு முற்றான- பொதுவான இலக்கியம் என்று எதுவுமில்லை. ஒவ்வொரு எழுத்திலும் மிகத் தீவிரமான அரசியல் படிந்துள்ளது. உண்மையான இலக்கியம் வேறுபாடுகளைப் பதிவு செய்யக்கூடியது. தமிழ் மரபில் மேலாதிக்க சாதி மனோ நிலை மறைமுக நஞ்சாகப் படிந்து கிடக்கிறது. இனி வரும் இலக்கியங்கள் வரலாற்றில் மறுக்கப்பட்ட, மறைக்கப்பட்ட குரல்களைப் பதிவு செய்வதாக இருக்கும். அவ்வகையில் தலித்தியமும், பெண்ணிய எழுத்துக்களும் மிக மிகத் தேவை யானவை. தலித்துகளும் பெண்களும் தமக்கு மறுக்கபட்ட மொழியில் தமது எதிர்ப்பையும் தமது உள்ளார்ந்த புலன் களையும் பதிவு செய்ய வேண்டியதிருக்கிறது. அந்தப் பதிவுதான் இப்போது தொடங்கப்பட்டிருக்கிறது. தலித்திலக்கியத்தை தலித் எழுத்தாளர்களும், பெண்ணிய எழுத்துக்களைப் பெண்களும் எழுதுதல் என்பதுதான் அறிவியல் அடிப்படையில் சாத்தியமாகும்.

சிவதாணு : ஆண் எழுத்தாளர்கள், பெண் எழுத்தாளர் என்று வகைமைப்படுத்துவது பற்றி உங்கள் கருத்து என்ன?

அசோகமித்திரன்: ஒவ்வொரு எழுத்தாளரும் ஒவ்வொரு வகை. ஆண், பெண் என்பது இயற்கையிலேயே உள்ளது. அதை நாம் ஏன் மறுக்க வேண்டும்?

சிவதாணு: தற்போதைய பெண் கவிஞர்களைப் பற்றி...

அசோகமித்திரன்: அனாமிகா, இளம்பிறை, வெண்ணிலா போன்றோரின் சில கவிதைகளைப் படித்து ரசித்திருக்கிறேன். மாலதி மைத்ரியின் கட்டுரைகள் பல சிறப்பாக அமைந்திருந்தன. ஆனால் அவரும் ஒரு பெண் கவிஞர்தான்.

சிவதாணு : பெண்ணியம் பற்றி...

எம். ஜி. சுரேஷ் : ‘சிமோன் தி பூவா’ என்ற பிரெஞ்சு பெண் சிந்தனையாளர்தான் ‘தி செகண்ட் செக்ஸ்’ என்ற நூலில் முதல் தடவையாகப் பெண்ணியம் பற்றிப் பேசினார். இதிலிருந்துதான் பெண்மொழி, பெண் உடல், பெண்ணியம், பெண் விடுதலை போன்ற சொல்லாடல்கள் தோன்றின. ஒரு ஆணாதிக்கச் சமூகத்தில் ஒரு ஆணுக்கான மதிப்பீட்டை ஆண் உருவாக்குகிறான். அதேபோல் ஒரு பெண்ணுக்கான மதிப்பீட்டையும் ஆணேதான் உருவாக்குகிறான். இதிலிருந்து பெண் தன்னை விடுவித்துக் கொண்டு, தன்னுடைய மதிப்பீட்டை தானே உருவாக்க வேண்டும். பெண்ணைப் பற்றி ஒரு புதிய பார்வையைப் பெண்ணே உருவாக்கிக் கொள்ள வேண்டும். ஜேக் லக்கான் என்ற பிரெஞ்சு உளவியல் அறிஞர் ‘பெண் என்று யாருமே இல்லை’ (Women does not exit) என்கிறார். இதுதான் ஆணாதிக்கச் சமூகத்தில் ஒரு பெண்ணின் நிலை. எனவே பெண் என்பவள் உருவாக்கத்தில் இருக்கிறாள். அதைச் சாதிப்பதற்குத்தான் பெண்ணியத்தின் பங்களிப்பு இருக்கிறது.

சிவதாணு : கலாச்சாரக் காவலர்களால் இன்று பெண்ணியம் கேள்விக்குறியாகியுள்ளது. இதைப்பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

கலாப்ரியா : இதிலும் அடிப்படையான கருத்துச் சுதந்திரம் மறுக்கப்படுவது எனக்கு உடன்பாடு இல்லை. இது உளவியல்ரீதியாக அணுக வேண்டிய ஒரு விஷயமாகத்தான் எனக்குத் தெரிகிறது. இதை அவர்கள் உணர்ச்சிப் பூர்வமாக அணுகுவதால் சமூகத்திற்கு ஒரு பிரயோசனமும் இல்லை. இதை ரொம்ப பரபரப்பான விஷயமாக மீடியாக்களோ, தனிநபர்களோ ஆக்குவதுகூட எனக்கு உடன்பாடு இல்லை. இவர்களுக்கு இன்னொரு ஸ்கூப் கிடைக்கும் பட்சத்தில் தானாகவே இந்தப் பிரச்சினை மறைந்துவிடும். ஒட்டு மொத்தமாக ஆணாதிக்கத்திற்கு எதிரான போராக கருத்து மற்றும் அறிவியல் ரீதியாக எடுக்கச் சொல்லப்பட வேண்டிய பிரச்சனை இது.

சிவதாணு : பெண் கவிஞர்கள் எழுதும் உடல்மொழிக் கவிதைகளைச் சிலர் கடுமையாக எதிர்க்கிறார்கள். நீங்கள் இதை எதிர்க்கிறீர்களா? ஆதரிக்கிறீர்களா?

கலாப்ரியா : முழுக்க முழுக்க இதை நான் ஆதரிக்கிறேன். என்னுடைய கவிதைகளி லேயே இதற்கான கூறுபாடுகள் இருக்கின்றன. ஒரு விடுதலையை நோக்கிய புதிய பயணத்தில் இதுபோன்ற எதிர்க்குரல்களை நிர்தாட்சண்ய மாகப் புறம் தள்ளிவிடலாம். இப்போது பரபரப்பாகப் பேசக்கூடிய உடல்மொழியை மிகச் சாதாரணமாகச் சொல்லுவதென் றால், இது அடுக்ளைமொழிதான். அடுக்களை மொழியைக்கூட நாம் இன்னும் முழுமையாக வெளிக்கொணரவில்லை.

சிவதாணு : இன்றைய பெண் கவிஞர்களின் அனேக கவிதைகளில் உடல்மொழி பிரதானப்படுத்தப்படுகிறது. இதை ஆண் ஆதிக்கச் சிந்தனைக்கு எதிரான ஒரு செயல்பாடாகக் கருதலாமா?

பொன்னீலன் : உடல்மொழிப் பிரதானப் படுத்துவதும், பிரதானப்படுத்தாமல் இருப்பதுவுமல்ல இலக்கியத்தின் பிரச்சினை. ஆது இலக்கியமாகி இருக்கிறதா? அழகியல் பார்வை பெற்றிருக்கிறதா? சமூக அர்த்தம் கொண்டிருக்கிறதா? என்பதுதான் பிரச்சினை. எனக்குத் தெரிந்த வரையில் குட்டி ரேவதியின் ஒரு சில கவிதைகள் தவிர மற்றவர்களின் படைப்புகள் வெறும் உடல்சார் சம்பவங்களாகச் சிறுத்து நிற்கின்றன. கலைப் படைப்புகளாக அவை பரிணமிக்கவில்லை. உடல்சார்ந்து எழுதுகின்றவர்களில் பலர் சுயகவனம் பெறுவதற்காக இப்படிச் செய்கிறார்களோ என்று எனக்குத் தோன்றுகிறது.

சிவதாணு : பெண் கவிஞர்கள் எழுதும் உடல் மொழிப் பற்றி...

ஜெயமோகன் : கவிஞர்கள் எப்படியும்- எதை வேண்டுமானாலும் எழுதலாம். சுதந்திரத்திற்கு மறுபெயர் கவிதை. அவை நல்ல கவிதைகள் என்றால் அச்சுதந்திரம் கொண்டாடப்படுகிறது என்றே பொருள்.

அதே சமயம் எதிர்ப்புகளைக் கண்டு அணிதிரள்வது படைப்பாளி செய்யக்கூடிய செயல் அல்ல. எழுத்தாளர்களின் எழுத்து சமூகத்தில் பரபரப்பையோ, எதிர்பையோ உருவாக்குவது இயல்பே ஆகும். மேலை நாட்டிலும் பெண் கவிஞர்களுக்கு எதிர்ப்புகளும் மறுப்புகளும் உண்டு. இது எழுத்தின் இயல்புகளே.

சிவதாணு : இன்றைய சூழலில் பெண் படைப்பாளிகளின் பங்களிப்பு எப்படி உள்ளது?

சாரு நிவேதிதா : பெண் படைப்பாளிகளின் எழுத்து சொல்லும்படியாக இல்லை. மிகப் பலவீனமாக உள்ளது. சுகிர்தராணியின் கவிதைகளில் பாலியல் வெளிப்பாடு உள்ளது - ஆனால் கவிதை இல்லை. சல்மாவிடம் சுயதொழில் செய்வோரின் (Entre preneur) முனைப்புதான் தெரிகிறதே தவிர இலக்கியம் இல்லை. மாலதி மைத்ரியின் கவிதைகள் மட்டுமே செறிவாக உள்ளது. ஆனால் அவர் எப்போதுமே கையில் குண்டாந்தடியுடன் அலைவதைப் பார்த்தால் பயமாக இருக்கிறது. உமாமகேஸ்வரி பாவம்... எல். கே. ஜியிலேயே நான்கைந்து ஆண்டுகளாகப் படித்துக் கொண்டிருக்கிறார். பொதுவாக பெண்படைப்பாளிகள் எழுத்தில் பலவீனமாக இருப்பதன் காரணத்தை அவர்கள் கண்டுபிடித்துக் களைய வேண்டும். எனக்குத் தெரிந்து சில காரணங்களைச் சொல்லலாம்.

தன் எழுத்தை ‘promote’ செய்வதற்காகத் தன் மனசாட்சிக்கு விரோதமான காரியங்களில் ஈடுபடுவது. உலக இலக்கியங்களைக் கற்காதது. சுற்றுப்புறத்தையும் குடும்பத்தையும் பார்த்து பயப்படுவது. சில பெண் கவிஞர்களின் புத்தகங்களைச் சமீபத்தில் பார்த்தேன். தரத்தில் மிகவும் கீழே இருக்கும் அப்புத்தகங்களுக்குப் பிரம்மராஜன், ஞானக்கூத்தன், சுகுமாரன், ஜெயமோகன் போன்றவர்கள் முன்னுரை எழுதி ஆகா, ஓகோ என்று புகழந்து தள்ளியிருப்பதைப் பார்த்த போது, இக்கவிதை நூல்களை ஆண்கள் எழுதியிருந்தால் இவர்கள் இப்படிச் புகழ்ந்திருப்பார்களா என்று எண்ண வைத்தது. இப்படிச் செய்வது அதர்மம் அல்லவா; அதனால்தான் சொல்கிறேன். பெண் எழுத்தாளர்கள் எழுத்தில் கவனம் செலுத்துவதில்லை என்று. எழுத்து நன்றாக இருந்தால் எதற்கு இந்த முன்னுரை, பின்னுரை எல்லாம்?

நன்றி - உதயம் நேர்காணல்கள்